Wednesday, February 6, 2008

சோர்ந்துபோகாதே!

"ஆண்டவர் நம்மை வருத்தினாலும், தமது பேரன்பால் இரக்கம் காட்டுவார்" - புலம்பல் 3:32

இயேசுவின் வாழ்வில் பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவரது மனதில் கீழ்வரும் கேள்விகள் எழும்பியிருக்கும்..

"இது எனக்குத் தேவைதானா?
எல்லாக் காரியங்களிலும் என் தந்தைக்கு நான் கீழ்படியவில்லையா? நான் மக்களுக்கு நல்லது மட்டுந்தானே செய்தேன்? ஏன் ஆண்டவரே, ஏன்தான் நான் இப்படி பாடுபடவேண்டுமோ?"

பிறரது பிரச்சனைக்களுக்காய்க் கரிசனை கொள்வதின் மூலம் இயேசு சுயபரிதாபத்தை மேற்கொண்டார்.

மூன்று முக்கிய எடுத்துக்காட்டுக்கள் இதோ...

1.எருசலேம் பெண்மணிகள்:

எருசலேமின் தெருக்களில் இயேசு சிலுவையைச் சுமந்து நடந்து செல்கையில்,
அங்குள்ள பெண்கள் அவருக்காய் அழுது புலம்பினர். அவரோ அவர்களைத் திரும்பிப் பார்த்து " எனக்காக அழாமல், உஙளுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் " என்றார். ( லூக் 23:27-31).

தான் மகிமையும் மகிழ்வும் நிறைந்த நாட்களை அனுபவிக்க பரலோகம் செல்கிறார்; ஆனால் அப்பெண்மணிகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமோ வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கொடியவையாயிருக்குமென இயேசு உணர்ந்தார். அவர்களது எதிர்காலப் பாடுகளைக் குறித்த எண்ணம் அவரது அன்றையப் பாடுகளிலிருந்து அவரது பார்வையைப் பறித்தது.

2.சிலுவைக் கள்ளன்:

இயேசுவுடன் சிலுவையிலறையப்பட்ட இரு கள்ளர்களில் ஒருவன் அடுத்தவனைப் பார்த்து, " நாம் செய்தவற்றிற்குத் தகுந்த பலனை அடைகிறோம்; இவரோ தகாதது ஒன்றையும் செய்யவில்லையே" என்று அவனைக் கடிந்துக் கொண்டான்.(லூக்கா 23:39-41)

இவ்விதச் சொற்கள் இயேசுவின் காதுகளில் விழுந்த மாத்திரத்தில் அவை அவரைச் சுயபரிதாபத்தில் அமிழ்த்திருக்க முடியும். அவரோ அந்தக் கள்ளனின் பரிதாப நிலையையே கவனிக்கலானார். அவன் தண்டிக்கப்பட்டது நியாயந்தான்;

ஆனாலும் அவனது இறுதியான உணர்வையும் வேண்டுதலையும் இயேசு மதித்தார்.
"நான் பரதீசு செல்கிறேன்; நீயும் என்னோடு வா!" என்றுரைத்தார்.

3.சிலுவைக்கருகில் மாதுக்கள்

சிலுவைக்கருகில் மம்மி மேரி,மாமி மேரி, மகதலேனா மேரி ஆகிய மூன்று மேரிகளும் நின்றுகொண்டிருந்தனர்(யோ 19:25). கண்ணீர் சொருந்துகொண்டிருந்த அவர்களது கண்கள் இயேசுவைச் சுயபரிதாபத்திற்குள் தள்ளியிருக்கும்.





அவரோ அதற்கு இடங்கொடாமல், தமது தாயாரின் தேவையில் கரிசனை கொண்டார். மரியாளை யோவானுக்குத் தாயாகும், யோவானை மரியாளுக்கு மகனாகவும் கொடுத்தார்.

சிலுவைக்கு எதிரில் சுவீகார வைபவம்!

"எனது தந்தை தமது மகனைத் திரும்பப் பெறுகிறார். ஆனால் மம்மி, நீங்கள் ஒரு மகனை இழக்கிறீர்கள். எனக்குப் பதிலாக யோவானை எடுத்துக் கொள்ளுங்கள்!"

பிறரது பாடுகள் நமது பாடுகளைவிட அதிகம்.
இந்த அறிவு என்று நமக்கு உதிக்கிறதோ அன்றுதான் பாடுகளைச் சமாளிப்பது எப்படி என நாம் கற்றுக்கொள்ளத் துவங்குவோம்.

Tuesday, February 5, 2008

சோதனைகள்...

சோதிக்கப்படுவது பாவமல்ல;சோதனையில் விழுவதே பாவம்.
சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும்போதெல்லாம் நாம் வலுவடைகிறோம்; அதற்கு தலையசைக்கும் போதெல்லாம் வலுவிழக்கிறோம்.
சோதனையை வெல்லவேண்டுமென்ற உள்ளான விருப்பமில்லையேல் வெற்றி சாத்தியமில்லை.
சோதனைகள் நாம் சற்றும் எதிர்பாராத நபரிடிமிருந்தோ, இடத்திலிருந்தோ, சற்றும் எதிர்பாராத நேரத்தில் நம்மைத் தாக்கலாம்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்தில் எனக்குச் சோதனையே வராது என்று எவரும் சொல்லமுடியாது. எந்தப் பாவதிற்கு விரோதமாக மிகத் தீவிரமாய்ப் பிரசங்கித்தீர்களோ அந்தப் பாவத்தைச் செய்வதற்க்குதான் உங்களுக்கு திரும்ப திரும்ப சோதனை வரும்.
மற்றவர்களை எந்தக் காரியத்தில் திடப்படுத்தினீர்களோ அதில்தான் நீங்கள் அசைக்கப்படுவீர்கள்.
தினமும் கடவுளது உதவி நாடி, கவனமாய் நடந்துக்கொள்ளுங்கள்!!!

Monday, February 4, 2008

ஜெபமே ஜீவன்....


கடவுள்மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்பதைமிகவும் உரிய முறையில் வெளிக்காட்டுவதே ஜெபம்.


ஜெபத்துடன் உபவாசத்தையும் கூட்டிக்கொள்ளும்போது. கடவுள் இல்லாமல் நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்று அவரிடம் சொல்லுகிறோம்.


ஜெபம் என்பது கடவுளை மாற்றும் கருவியல்ல; அது அவரது திட்டத்துக்குள் நம்மைப் பொருந்தும்படி நம்மை மாற்றும் சாதனம்.


நாம் ஜெபத்தில் தளர்ந்தால் எல்லாப்பகுதிகளிலும் தவறுமாதலால் நமது ஜெபவாழ்வையே பிசாசு முதலாவது குறி வைக்கிறான்.

கடவுளோடுள்ள நமது உறவை ஜெபம் நெருக்கமாக்குவதால் ஜெபம் இனிதாகுகிறது.


எனக்கு விருப்பமானவற்றையெல்லாம் நான் கடவுளிடம் கேட்கிறேன்;

அவரோ எனக்குத் தேவையானவற்றை மட்டுமே எனக்குத் தருகிறார்.


எனவே பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

Friday, February 1, 2008

உபசரிப்பு!!

உபசரிப்பும் நலன் விசாரிப்புகளும் நவீனவுலகில் விரைவாய் மறைந்துகொண்டிருக்கிருக்கின்றன.
உறவுகள் ஆசாபாசமற்றிருக்கின்றன. தோழமை என்பதற்காகவே ஒருவரோடுரொவர் நேரம் செலவழிப்பது வீணாகத் தெரிகிறது. இது திருமறைக்கு முரணானது.
இந்தவிதப் போக்கினால் நாம் வாழ்க்கையின் உசிதங்கள் பலவற்றை இழந்துப்போகிறோம்.
மின்னஞ்சல் வேகமாகச் செல்லலாம்:ஆனால் அது ஒருபோதும் கையால் எழுதப்படும் கடிதங்களுக்கு இணையாகாது.
ஆனால் அன்பு நிறைந்த விசாரிப்புகள் நமக்குத் தேவையில்லை என்ற நிலைக்கு நாமே வரமுடியாது. நாம் உபசரிக்கும் சில அன்னியர்கள் கடவுளின் தூதர்களாயிருக்கலாம்.
'அன்னியரை உபசரிக்க நாடுங்கள்'

Thursday, January 31, 2008

ஆரோக்கியம்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நமது உடல் கடவுளின் இல்லம்.

ஒன்றுக்கொன்று தொடர்பு அதிகமாயுள்ள பாவத்திற்கும் வியாதிகும் நமது உடலை விலக்கிக் காத்துக்கொள்ள நம்மால் முடிந்த அத்தனையும் செய்ய வேண்டும்.

நன்கு சாப்பிட வேண்டும்,நன்கு தூங்க வேண்டும், போதுமான அளவு உடற்பயிற்சி செய்யவேண்டும், கடினமாய் உழைக்க வேண்டும்.

'சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழு!'

இப்பொற்கட்டளை யாவருக்கும் உரியது.

தெய்வீக சுகமளிப்பு வரங்களும், மருத்துவக்கலையும் நமது ஆரோக்கியத்திற்காய்க் கடவுள் தந்த அருட்கொடைகளாகும்.

விடுமுறை கட்டாயம் எடுக்க வேண்டும்.

கடவுள் ஆறு நாள் வேலை செய்ததும் ஒரு நாள் லீவு போட்டுவிடுவார்!

Wednesday, January 30, 2008

நன்றியுணர்வு..



நன்றிகெட்ட உலகில் வாழும் நாம் கடவுளுக்கும் மனிதருக்கும் நன்றியுள்ளவர்களாயிருக்க நம்மை எப்பொழுதும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

நன்றியுணர்வு இருக்கத்தான் செய்கிறது என்று இராமல், சொல்லாலும் செயலாலும் பாராட்டுதலுடன் அதை வெளிக்காட்ட வேண்டும். பிறருக்கு நன்றிகூறமுடியாதபடி நமது தொண்டையை அடைப்பது பெருமையே.சிறுவயது முதல் நமக்குதவியவர்களின் பட்டியலொன்றைத் தயாரித்து வைத்துக்கொண்டால் பிறந்த நாட்கள், மறுபடி பிறந்த நாட்கள் மற்றும் நிறைவு விழாக்களின்போது அன்னாருக்குத் தகுந்த வாழ்த்துக்கள் அனுப்பப் பேருதவியாகயிருக்கும்.

Tuesday, January 29, 2008

பொறுமை...



நாம் சுறுசுறுப்பின்றி சோம்பேறியாயிருக்கக் கூடாது:

அதே வேளையில் கடவுளுக்கு முந்திக்கொண்டும் ஓடக்கூடாது.

கடவுளோடு நடப்பதென்றால் அவரது வேகத்திலேயே அடியெடுத்து வைப்பதாகும். ஆத்திரப்பட்டு ஆண்டவர் எதையும் செய்துவிடுபவரல்ல:

ஏனெனில் யாவும் தமது ஆளுகைக்குள்ளேயே இருக்கிறதென்று அவருக்குத் தெரியும்.

இவ்வுண்மையை நாம் நம்பினால் நாமும் பதறமாட்டோம்.

கடவுளின் தாமதங்கள் மறுப்புகளல்ல. அவர் எல்லாவற்றையும் அழகாக அதினதின் காலங்களில் செய்கிறவர்.

பொறுயின்மையினால் உண்டாகும் பாதிப்புகளை சரிசெய்வது அரிது. கடவுள் நமக்கென்று நியமிக்கும் குறிகளை எட்ட குறுக்குவழியே கிடையாது.

சரியான பாதை நீண்டதாகவும் நொடிகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்:

ஆனால் அதில்தான் கடவுள் நம்மை வளர்ப்பித்து முதிர்ச்சியடையச் செய்கிறார்.

பொறுமையே பூரணம்:

அதுவே நற்குனங்களின் நாயகி:

கடவுள் நம்மிடம் பொறுமையாயிருப்பது போலவே நாமும் எல்லாரிடமும் பொறுமையாயிருக்க வேண்டும்.