Monday, March 3, 2008

தலைமுறை இடைவெளி...

இளைஞருக்கும், முதியோருக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடு மூன்று அம்சங்களில் ஏற்படுகிறது.
1.பார்வை
2.மதிப்பீடு
3.கணக்கீடு

1.பார்வை[outlook]

மூத்தோர், அவர்கள் வாலிபர்களாக இருந்த காலத்தில் எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருந்ததோ, அதே கண்ணோட்டத்திலேயெ பெரும்பாலும் பார்ப்பார்கள்.
நவீன முறையில் முடி வெட்டிக்கொள்வது [ hair style] , நவீன முறையில் உடை உடுத்துவது போன்றன அவர்கள் பார்வையில் கோமாளித்தனமாகவும், Indescent ஆகவும் தோன்றும்.
ஆனால் இவையோ வாலிபருக்கு விருப்பமானதாகவும், கவுரவச் சின்னமாகவும் [ status symbol] தோன்றும்.
சில கல்வி நிறுவனங்கள், பணியிடங்களில் , சபைகளில் கூட இளைஞருக்கு கலச்சாரக் கட்டுபாடுகள் [ Culture policing] உண்டு.
பல நேரங்களில் இளைஞர்கள் இக்கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை,
"வேதாகமத்தில் எங்கு எழுதியுள்ளது?" என்று வாக்குவாதம் செய்கின்றனர்,
"சட்டத்தில் எங்கு உள்ளது?" என போர்கொடி உயர்த்துகின்றனர்.
சுதந்திரத்தை விரும்புகின்றனர்.
ஆனால் வசனம் கூறுகின்றது ,' கீழ்படியுங்கள்'.

'அந்தப்படி இளைஞரே, மூப்பருக்கு( மூத்த வயதினருக்கு) கீழ்படியுங்கள்...... [1 பேதுரு 5:5]

2. மதீப்பீடுகள்[ Values]

மூத்தோர் சில மதிப்பீடுகளை வாழ்வில் ஆதரங்களாக கொண்டுள்ளனர்.
காலையில் சீக்கிரமாக எழுவது, பெரியவர்களுக்கு இருகரம் கூப்பி தோத்திரம்/வணக்கம் கூறுவது,
பெரியவர்களுக்கு எதிர்த்து பேசாமல் இருப்பது[அவர்கள் தவறுதலாக கூறிவிட்டாலும்],
ஞாயிற்றுக்கிழமையில் எந்தப் பிரயாணத்தையும் அலுவலையும் மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை சில உதாரணங்கள்.
இளைஞர்களோ இரவு நீண்டநேரம் படித்துவிட்டு, காலையில் தாமதமாக எழுவதை விரும்புகின்றனர்.
சத்தமாக 'வேகமான' இசையைக் கேட்க விரும்புகின்றனர்.
'ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் விடுமுறை, அன்று ஆலயத்துக்குச் சென்றுவிட்டு மற்ற நேரத்தில் எதையும் செய்யலாம்' என எண்ணுகின்றனர்.
இது மூத்தோருக்கும், இளையோருக்கும் உரசலை உருவாக்குகிறது.
மூத்தோர் ஒழுங்கு[Discipline] பற்றி கவனமாயிருப்பர்.
எடுத்த பொருளை அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பர்.
இளைஞரோ , வீடு என்றால் casual -ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பர்.
எது சரி என்று விவாதம் செய்வதை விட, ' ஏற்றக்காலம் வரும் வரை இளைஞரே கீழ்படியுஙகள்' என்றே கூறுகிறது தேவனுடைய வார்த்தை.

3. கணக்கீடுகள் [ Calculations]

மூத்தோர் , இளைஞராக இருந்தபோதுள்ள பணமதிப்பு அதிகம், இப்போதோ பணமதிப்பு முறைவு.
ஆகவே, இளைஞர் செலவு செய்கிற அளவு, மூத்தோருக்கு வீண்செலவு செய்வதாகத் தோன்றும்.
மூத்தோர் காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை, இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன.
எனவே, இளைஞர் ஆடம்பரமாக வாழ்வதாக , மூத்தோருக்கு தோன்றும்.
ஆனாலும் இளைஞரே, மூத்த வயதினருக்கு கீழ்படியுஙக்ள்.
கர்த்தர் உங்களை உயர்த்துவார்.

கடைசியாக:

* உங்களுக்கு உங்களைவிட குறைந்தபட்சம் 15 வயது மூத்த நண்பர்கள்/ தோழிகள் உண்டா??

*மூத்தோர் உங்களுக்கு பிடிக்காத கட்டளைகளை இடும்போது, அதன் நோக்கம் நல்ல நோக்கமே, என்று என்றாவது சிந்தித்ததுண்டா??

*உங்கள் பிரச்சனைக்காக என்றாவது நீங்கள் மூத்தோரிடம் ஆலோசனை கேட்டதுண்டா???

Sunday, February 24, 2008

சோதனைகளை ஜெயிக்கலாம....வேத வசனம் கொண்டு!!

சோதனை வருவது பாவமல்ல: அதில் விழுவதுதான் பாவம்.
விழுந்தவுடன் பிறர்மீது குற்றஞ்சாட்டி, ஏதோவொன்றின் மீது பழி சுமத்துவது இயல்பு. ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் வந்த சோதனைகளை அவர்கள் எவ்விதம் சந்தித்தனர் என ஆராய்வது நடைமுறையில் பல படிப்பினைகளை நமக்குத் தரும்.

அறியாமை:

ஆதாம் ஏவாளுக்கு தேவ கட்டளை மிகவும் தெளிவானது.
அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. அது எளியது குறிப்பானது.[ஆதி 2:16,17]: என்றாலும் தவறினர்.

ஆனால், கல்லை அப்பமாக்ககூடாதென்றோ, கோபுரத்திலிருந்து குதிக்கக் கூடாதென்றோ பிதாவானவர் இயேசுவுக்குச் சொல்லியிருந்ததாகத் தகவல் இல்லை.
அப்படியானால் இக்காரியங்களைச் செய்யத் தூண்டிய பிசாசை இயேசு வென்றது எவ்வாறு?

அவர் திருவசனத்தின் "தத்துவங்கள்' முலம் செயல்பட்டார்.
அவர் தேவ நோக்கத்தை தெளிவாக புரிந்திருந்தபடியால் தேவத் திட்டங்களைச் சிதறடிக்கச் சத்துரு விரிக்கும் வலையை எளிதாய் அடையாளங் கண்டுக்கொண்டார்.

கல்லுகளை அப்பமாக்க வந்த முதல் சோதனையில் அவரது குமாரத்துவத்திற்கும், வசனத்தின் குறைவின்மைக்கும் சவால் வந்தது.
மேலிருந்து குதிக்கச் சொன்ன இரண்டாம் சோதனையில் பகட்டுக்கும், கடவுளை பரீட்ச்சிக்கவும் அழைப்பு வந்தது.
மூன்றாவது சோதனையில் மேனமைக்குக் குறுக்கு வழியைப் பிசாசு சொலிக்கொண்டிருந்தான்.

"ஐயோ எனக்குத் தெரியாது; என்வே தான் விழுந்தேன்" என்று ஒருநாளும் சொல்ல வேண்டாம். தேவன் தமது சத்தியத்தை நமது இருதயங்களில் வைத்துள்ளார். போதுமான வேதாகமத்தை கையில் தந்துள்ளார்.
மட்டுமல்ல, நம்மிலிருக்கும் ஆவியானவர் எதை ஏற்கவேண்டும், எதை எதிர்க்க வேண்டுமென போதித்தவண்ணமிருக்கிறார். ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு கட்டளை தேவையில்லை.

அடுத்தவர்:

'விலக்கிய கனியைப் புசித்தாயோவென தேவன் ஆதாமைக் கேட்டபோது அவன் பழியைத் தன் மனைவியின்மூது போட்டுவிட்டான்[ஆதி 3:12]

இயேசுவுக்கு மிக வலுவான சோதனையொன்று பேதுரு மூலம் வந்தது.
எருசலேமில் தாம் எவ்விதமாய் பாடு பட்டுக் கொல்லபடுவாரென்று இயேசு முன்னரிவித்துக்கொண்டிருக்கையில், பேதுரு" ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே" என்று அவரைக் கடிந்துக்கொண்டான்.
சிலிவையைத் தவிர்க்க சத்துருவின் தந்திரத்தை இதில் அடையாளங்கண்டு கொண்ட இயேசு பேதுருவை நோக்கி," எனக்கு பின்னாகப்போ, சாத்தானே!" என்றார்[ மத் 16: 21-23]
தமக்கு மிகவும் நெருங்கியதொரு சீடன் சொன்னான் என்பதால் இயேசு அவன் கூறியதை மதிக்கவில்லை.

ஏவாள் அந்த பழத்தை ஆதாமிடம் கொடுக்கையில் இதைத்தான் அவன் செய்திருக்க
வேண்டும்," அப்பாலே போ சாத்தானே" என்று சொல்ல வேண்டியவன்,
" அருகில் வா , சாமந்தியே" என்றானோ????

நாம் உயிருக்குயிராய் நேசிப்பிவர்களிடமிருந்தும் நமக்கு சோதனை வரலாம்.சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்தும் சோதனை நம்மைச் சந்திக்கலாம்.

" என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே" [நீதி 1:10]

Tuesday, February 12, 2008

மனம்போன போக்கிலே...


சொந்த விருப்பத்தின்படி வாழ்வதையே பொதுவாக நாம் விடுதலை வாழ்வு என்று எண்ணுகிறோம். ஆனால் " நமக்குச் சரியாக தோன்றுவது முடிவில் சாவுக்கு நடத்தும் பாதையாகிடும்" என்று நீதிமொழிகள் 14:12இல் சாலோமோன் ஞானி கூறுகின்றார்.


நாம் அறிந்தோ அறியாமலோ நம் ஜெபங்களில் தேவ சித்தத்தின் 'சத்தத்தை' விட நமது விருப்பத்திற்கான 'சம்மதத்தையே' நாடுகிறோம்.
ஜெபத்தில் நமது விருப்பங்களை ஒவ்வித்தவுடன் நமக்கு புனித ஒப்புதல் கிடைத்துவிட்டதென நாமே திட்டங்களை செயல்படுத்தப் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவிடுகிறோம்.


ஆண்டவருக்குச் சித்தமானால்தான் உயிரோடே இருப்போம்.
அப்படியிருந்தால்தான் எதையும் செய்யமுடியும்.இவ்வித பயபக்தி அவசியம்.

பல சந்தர்ப்பங்களீல் நம் கனவுகளும் இலக்குகளுமே நம்க்கு விக்கிரகங்களாகிவிடுகின்றன. அந்த விக்கிரகங்களை அடையாவிட்டால் வாழ்வே சூன்யமாகிவிட்டது என்ற நிலைக்குக்கூட வந்துவிடுகிறோம். அச்சமயங்களில் தேவனது 'பரிபூரண' சித்தத்தைத் தவறவிட்டு அவரது 'அனுமதிச்; சித்ததிலேயே அமர்ந்துவிடுகிறோம்.

கடவுளின் கண்பார்வையைப் புரிந்துகொண்டு அதின்படி நடப்போர் பாக்கியவான்கள் (சங் 32:9).
தனித்து இயங்குவதற்கு தம்மிடம் வல்லமையையும் அதிகாரத்தையும் கிறிஸ்து வைத்திருந்தாலும், அவைகளை தாமாகவே களைந்துவிட்டு ,"தேவனே உமது சித்தத்தின்படி செய்ய இதோ வருகிறேன்" என்று தம்மை அர்ப்பணித்துக்கோண்டதால் இப்பூவுலக வாழ்வில் ஒருபோதும் தமது பிதவின் சித்தம் நிறைவேற்ற அவர் தவறவில்லை (எபி 10:7,9)




என் இஷ்டப்படி நடந்தேன்,ஐயோ; முன்னாளிலே;
ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ நடத்துமே;
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வீம்பு கொண்டேன், அன்பாக மன்னியும்!

Wednesday, February 6, 2008

சோர்ந்துபோகாதே!

"ஆண்டவர் நம்மை வருத்தினாலும், தமது பேரன்பால் இரக்கம் காட்டுவார்" - புலம்பல் 3:32

இயேசுவின் வாழ்வில் பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்தபோது அவரது மனதில் கீழ்வரும் கேள்விகள் எழும்பியிருக்கும்..

"இது எனக்குத் தேவைதானா?
எல்லாக் காரியங்களிலும் என் தந்தைக்கு நான் கீழ்படியவில்லையா? நான் மக்களுக்கு நல்லது மட்டுந்தானே செய்தேன்? ஏன் ஆண்டவரே, ஏன்தான் நான் இப்படி பாடுபடவேண்டுமோ?"

பிறரது பிரச்சனைக்களுக்காய்க் கரிசனை கொள்வதின் மூலம் இயேசு சுயபரிதாபத்தை மேற்கொண்டார்.

மூன்று முக்கிய எடுத்துக்காட்டுக்கள் இதோ...

1.எருசலேம் பெண்மணிகள்:

எருசலேமின் தெருக்களில் இயேசு சிலுவையைச் சுமந்து நடந்து செல்கையில்,
அங்குள்ள பெண்கள் அவருக்காய் அழுது புலம்பினர். அவரோ அவர்களைத் திரும்பிப் பார்த்து " எனக்காக அழாமல், உஙளுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் " என்றார். ( லூக் 23:27-31).

தான் மகிமையும் மகிழ்வும் நிறைந்த நாட்களை அனுபவிக்க பரலோகம் செல்கிறார்; ஆனால் அப்பெண்மணிகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்குமோ வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கொடியவையாயிருக்குமென இயேசு உணர்ந்தார். அவர்களது எதிர்காலப் பாடுகளைக் குறித்த எண்ணம் அவரது அன்றையப் பாடுகளிலிருந்து அவரது பார்வையைப் பறித்தது.

2.சிலுவைக் கள்ளன்:

இயேசுவுடன் சிலுவையிலறையப்பட்ட இரு கள்ளர்களில் ஒருவன் அடுத்தவனைப் பார்த்து, " நாம் செய்தவற்றிற்குத் தகுந்த பலனை அடைகிறோம்; இவரோ தகாதது ஒன்றையும் செய்யவில்லையே" என்று அவனைக் கடிந்துக் கொண்டான்.(லூக்கா 23:39-41)

இவ்விதச் சொற்கள் இயேசுவின் காதுகளில் விழுந்த மாத்திரத்தில் அவை அவரைச் சுயபரிதாபத்தில் அமிழ்த்திருக்க முடியும். அவரோ அந்தக் கள்ளனின் பரிதாப நிலையையே கவனிக்கலானார். அவன் தண்டிக்கப்பட்டது நியாயந்தான்;

ஆனாலும் அவனது இறுதியான உணர்வையும் வேண்டுதலையும் இயேசு மதித்தார்.
"நான் பரதீசு செல்கிறேன்; நீயும் என்னோடு வா!" என்றுரைத்தார்.

3.சிலுவைக்கருகில் மாதுக்கள்

சிலுவைக்கருகில் மம்மி மேரி,மாமி மேரி, மகதலேனா மேரி ஆகிய மூன்று மேரிகளும் நின்றுகொண்டிருந்தனர்(யோ 19:25). கண்ணீர் சொருந்துகொண்டிருந்த அவர்களது கண்கள் இயேசுவைச் சுயபரிதாபத்திற்குள் தள்ளியிருக்கும்.





அவரோ அதற்கு இடங்கொடாமல், தமது தாயாரின் தேவையில் கரிசனை கொண்டார். மரியாளை யோவானுக்குத் தாயாகும், யோவானை மரியாளுக்கு மகனாகவும் கொடுத்தார்.

சிலுவைக்கு எதிரில் சுவீகார வைபவம்!

"எனது தந்தை தமது மகனைத் திரும்பப் பெறுகிறார். ஆனால் மம்மி, நீங்கள் ஒரு மகனை இழக்கிறீர்கள். எனக்குப் பதிலாக யோவானை எடுத்துக் கொள்ளுங்கள்!"

பிறரது பாடுகள் நமது பாடுகளைவிட அதிகம்.
இந்த அறிவு என்று நமக்கு உதிக்கிறதோ அன்றுதான் பாடுகளைச் சமாளிப்பது எப்படி என நாம் கற்றுக்கொள்ளத் துவங்குவோம்.

Tuesday, February 5, 2008

சோதனைகள்...

சோதிக்கப்படுவது பாவமல்ல;சோதனையில் விழுவதே பாவம்.
சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கும்போதெல்லாம் நாம் வலுவடைகிறோம்; அதற்கு தலையசைக்கும் போதெல்லாம் வலுவிழக்கிறோம்.
சோதனையை வெல்லவேண்டுமென்ற உள்ளான விருப்பமில்லையேல் வெற்றி சாத்தியமில்லை.
சோதனைகள் நாம் சற்றும் எதிர்பாராத நபரிடிமிருந்தோ, இடத்திலிருந்தோ, சற்றும் எதிர்பாராத நேரத்தில் நம்மைத் தாக்கலாம்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்தில் எனக்குச் சோதனையே வராது என்று எவரும் சொல்லமுடியாது. எந்தப் பாவதிற்கு விரோதமாக மிகத் தீவிரமாய்ப் பிரசங்கித்தீர்களோ அந்தப் பாவத்தைச் செய்வதற்க்குதான் உங்களுக்கு திரும்ப திரும்ப சோதனை வரும்.
மற்றவர்களை எந்தக் காரியத்தில் திடப்படுத்தினீர்களோ அதில்தான் நீங்கள் அசைக்கப்படுவீர்கள்.
தினமும் கடவுளது உதவி நாடி, கவனமாய் நடந்துக்கொள்ளுங்கள்!!!

Monday, February 4, 2008

ஜெபமே ஜீவன்....


கடவுள்மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்பதைமிகவும் உரிய முறையில் வெளிக்காட்டுவதே ஜெபம்.


ஜெபத்துடன் உபவாசத்தையும் கூட்டிக்கொள்ளும்போது. கடவுள் இல்லாமல் நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்று அவரிடம் சொல்லுகிறோம்.


ஜெபம் என்பது கடவுளை மாற்றும் கருவியல்ல; அது அவரது திட்டத்துக்குள் நம்மைப் பொருந்தும்படி நம்மை மாற்றும் சாதனம்.


நாம் ஜெபத்தில் தளர்ந்தால் எல்லாப்பகுதிகளிலும் தவறுமாதலால் நமது ஜெபவாழ்வையே பிசாசு முதலாவது குறி வைக்கிறான்.

கடவுளோடுள்ள நமது உறவை ஜெபம் நெருக்கமாக்குவதால் ஜெபம் இனிதாகுகிறது.


எனக்கு விருப்பமானவற்றையெல்லாம் நான் கடவுளிடம் கேட்கிறேன்;

அவரோ எனக்குத் தேவையானவற்றை மட்டுமே எனக்குத் தருகிறார்.


எனவே பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

Friday, February 1, 2008

உபசரிப்பு!!

உபசரிப்பும் நலன் விசாரிப்புகளும் நவீனவுலகில் விரைவாய் மறைந்துகொண்டிருக்கிருக்கின்றன.
உறவுகள் ஆசாபாசமற்றிருக்கின்றன. தோழமை என்பதற்காகவே ஒருவரோடுரொவர் நேரம் செலவழிப்பது வீணாகத் தெரிகிறது. இது திருமறைக்கு முரணானது.
இந்தவிதப் போக்கினால் நாம் வாழ்க்கையின் உசிதங்கள் பலவற்றை இழந்துப்போகிறோம்.
மின்னஞ்சல் வேகமாகச் செல்லலாம்:ஆனால் அது ஒருபோதும் கையால் எழுதப்படும் கடிதங்களுக்கு இணையாகாது.
ஆனால் அன்பு நிறைந்த விசாரிப்புகள் நமக்குத் தேவையில்லை என்ற நிலைக்கு நாமே வரமுடியாது. நாம் உபசரிக்கும் சில அன்னியர்கள் கடவுளின் தூதர்களாயிருக்கலாம்.
'அன்னியரை உபசரிக்க நாடுங்கள்'

Thursday, January 31, 2008

ஆரோக்கியம்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நமது உடல் கடவுளின் இல்லம்.

ஒன்றுக்கொன்று தொடர்பு அதிகமாயுள்ள பாவத்திற்கும் வியாதிகும் நமது உடலை விலக்கிக் காத்துக்கொள்ள நம்மால் முடிந்த அத்தனையும் செய்ய வேண்டும்.

நன்கு சாப்பிட வேண்டும்,நன்கு தூங்க வேண்டும், போதுமான அளவு உடற்பயிற்சி செய்யவேண்டும், கடினமாய் உழைக்க வேண்டும்.

'சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழு!'

இப்பொற்கட்டளை யாவருக்கும் உரியது.

தெய்வீக சுகமளிப்பு வரங்களும், மருத்துவக்கலையும் நமது ஆரோக்கியத்திற்காய்க் கடவுள் தந்த அருட்கொடைகளாகும்.

விடுமுறை கட்டாயம் எடுக்க வேண்டும்.

கடவுள் ஆறு நாள் வேலை செய்ததும் ஒரு நாள் லீவு போட்டுவிடுவார்!

Wednesday, January 30, 2008

நன்றியுணர்வு..



நன்றிகெட்ட உலகில் வாழும் நாம் கடவுளுக்கும் மனிதருக்கும் நன்றியுள்ளவர்களாயிருக்க நம்மை எப்பொழுதும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

நன்றியுணர்வு இருக்கத்தான் செய்கிறது என்று இராமல், சொல்லாலும் செயலாலும் பாராட்டுதலுடன் அதை வெளிக்காட்ட வேண்டும். பிறருக்கு நன்றிகூறமுடியாதபடி நமது தொண்டையை அடைப்பது பெருமையே.சிறுவயது முதல் நமக்குதவியவர்களின் பட்டியலொன்றைத் தயாரித்து வைத்துக்கொண்டால் பிறந்த நாட்கள், மறுபடி பிறந்த நாட்கள் மற்றும் நிறைவு விழாக்களின்போது அன்னாருக்குத் தகுந்த வாழ்த்துக்கள் அனுப்பப் பேருதவியாகயிருக்கும்.

Tuesday, January 29, 2008

பொறுமை...



நாம் சுறுசுறுப்பின்றி சோம்பேறியாயிருக்கக் கூடாது:

அதே வேளையில் கடவுளுக்கு முந்திக்கொண்டும் ஓடக்கூடாது.

கடவுளோடு நடப்பதென்றால் அவரது வேகத்திலேயே அடியெடுத்து வைப்பதாகும். ஆத்திரப்பட்டு ஆண்டவர் எதையும் செய்துவிடுபவரல்ல:

ஏனெனில் யாவும் தமது ஆளுகைக்குள்ளேயே இருக்கிறதென்று அவருக்குத் தெரியும்.

இவ்வுண்மையை நாம் நம்பினால் நாமும் பதறமாட்டோம்.

கடவுளின் தாமதங்கள் மறுப்புகளல்ல. அவர் எல்லாவற்றையும் அழகாக அதினதின் காலங்களில் செய்கிறவர்.

பொறுயின்மையினால் உண்டாகும் பாதிப்புகளை சரிசெய்வது அரிது. கடவுள் நமக்கென்று நியமிக்கும் குறிகளை எட்ட குறுக்குவழியே கிடையாது.

சரியான பாதை நீண்டதாகவும் நொடிகள் நிறைந்ததாகவும் இருக்கலாம்:

ஆனால் அதில்தான் கடவுள் நம்மை வளர்ப்பித்து முதிர்ச்சியடையச் செய்கிறார்.

பொறுமையே பூரணம்:

அதுவே நற்குனங்களின் நாயகி:

கடவுள் நம்மிடம் பொறுமையாயிருப்பது போலவே நாமும் எல்லாரிடமும் பொறுமையாயிருக்க வேண்டும்.

Sunday, January 13, 2008

கலப்புத் திருமணம்



"யூதர் என்றும் கிரேக்கர் என்றும் இல்லை:
அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை.
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறீர்கள்" ( கல 3:28 )






இன்று பல கலப்புத் திருமணங்கள் நம் நாட்டில் நடைபெறுகின்றன. இதைத் தீவரமாய் ஆதரிக்கும் பலருண்டு: அதே போல் எதிர்க்கும் பழமைவாதிகளும் உண்டு பைபிளில் இதற்குப் பதிலுண்டா?

நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வேதாகமம் ஒருபோதும் மாற்றுக்கலாச்சாரத் திருமணங்களுக்கு எதிராய்ப் பேசுகிறதில்லை.

விசுவாசிகள் அவிசுவாசிகளை மணப்பதை மட்டுமே அது எதிர்க்கிறது ( 2 கொரி 6:14,15 ).

ஈசாக்குக்குக் கானானியரிடத்தில் பெண்கொள்ள வேண்டாமென ஆபிரகாம் கூறியது மாற்றுக்கலாச்சாரத் திருமணத்திற்கு எதிர்ப்பாயல்ல: தன்னை எந்நாட்டிலிருந்து கடவுள் வேறுபிரித்தாரோ, அந்நாட்டிற்குத் தனது மகன் திரும்பச் செல்லக்கூடாது என்பதற்காகவே.
கலப்பு மணம் செய்த மோசேக்கு எதிராய்ப் பேசிய மிரியாம்மீது கடவுள் சினங்கொண்டார் ( எண் 12:1,9 ).

யோசேப்பின் மனைவி எபிரெயப் பெண்ணல்ல ( ஆதி 41:45 ).
வேற்று நாட்டவரை மணமுடித்தால் பிள்ளைகளுக்குத் தாங்கள் எதைச் சேர்ந்தவர்களென்று குழப்பம்!


வேற்று மொழியினரென்றால் பொதுவானதொரு மொழியில் இருவரும் தேர்ந்திரிந்தாலொழிய நெஞ்சோடு நெஞ்சு பேசமுடியாது!
ஆகவே இதில் நடைமுறை ஞானம் வேண்டும்.

எல்லா காரியங்களும் பொருத்தமாயிருந்து, இருவரும் விசிவாசிகளாய் இருக்கும் பட்சத்தில், சாதி வித்தியாசம் என்ற ஒரே காரணத்தால் பெண்ணையோ மாப்பிள்ளையையோ வேண்டாமென்று சொல்வது கடவுளுக்கு பிரியமாயிருக்காது.

Wednesday, January 2, 2008

நாளொரு மேனி !!!




"ஆண்டவரை தன் நம்பிக்கையாய்க் கொண்டிருப்பவன் தண்ணீர் அருகில் நடப்பதும், நீரோடை ஓரமாய் வேர்விடுகிறதும், வெட்பம் வருகிறதைக் காணாமல் இலை பசுமையாயிருக்கிறதும், மழை குறைவான வருடத்திலும் காய்ந்து போகாமல் தவறாது கனிகொடுக்கிறதுமான மரம்போல் இருப்பான்" (எரே 17:8)

உங்கள் ஆன்மீக வாழ்வில் நீங்கள் இன்னும் வளருவதற்கென்றே இவ்வாண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்று உங்கள் வளர்ச்சிக்கு தடையாகவும் எதிராகவும் இருக்கும் நபர்கள் மற்றும் காரியங்களைப் பார்த்து ஆண்டவர் 'என் மக்களை வளரவிடு' என்று ஆணையிடுகிறார்.
கடவுள் உங்கள் பக்கம், எனவே வெற்றி உங்களுக்குத்தான்!

வேதத்தை தினமும் வாசியுங்கள்...
வாசிப்பதை சிந்தித்துப்பாருங்கள்....
விசுவாசத்துடன் கீழ்படியுங்கள்!!!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளருவீர்கள்!

WISH YOU A HAPPY NEW YEAR OF GROWTH AND FRUITFULNESS !

Sunday, December 30, 2007

புது வருட தீர்மானங்கள் !



புத்தாண்டு அல்லது பிறந்தநாள் தீர்மானங்கள் எடுக்காதவர் எவருமிலர் எனலாம். ஆனால், தோல்வி மேல் தோல்வி வரும்போது, வருந்தி இவ்விதத் தீர்மனங்கள் எடுப்பதில் அர்த்தமில்லையென நாளடைவில் முடிவுகட்டிவிடுகிற்றோம்.

இவ்வாண்டின்[2007] துவக்கத்தில் எடுத்த தீர்மானங்களை நினைத்துப்பார்த்தால் ஒருவேளை இவ்வித சோர்புகள் நமக்கு வரலாம்.

நல்ல தீர்மனங்கள் எடுக்க 'விருப்பமும்',
அதனை நடைமுறைப்படுத்த 'ஆற்றலும்' ,
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவராலேயே வருகின்றன. (பிலி-2:13).

கர்த்தரின் கரம் நமக்கு பின்னாலிருந்து செயல்படுகிறது. நல்ல தீர்மானங்களினால் நல்ல வளர்ச்சி உண்டாகும். இலக்கை சரியாகக் குறிக்கவும், மனச்சிதறல்களை தவிர்க்கவும் தீர்மாங்கள் உதவுகின்றன.

நமது தீர்மானங்கள் பலவற்றை கைக்கொள்ள முடியவில்லையே என் வரும் ஏக்கமும், அதைத் தொடர்ந்து வரும் குற்றவுணர்வும் நாம் திரும்பவும் முயற்ச்சிப்பதை தடை செய்கின்றன. ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குத் தோல்வி என்பது முடிவு அல்ல.நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் (சங் 37:23,24) (நீதி 24:16).

இருப்பினும் கீழ்கானும் யோசனைகள் நமக்கு உதவுமென நினைக்கிறேன்.....

*தீர்மானங்களில் பேராசை கூடவே கூடாது.
உதாரணமாக, நீங்கள் ஜெபத்தில் குறைவுள்ளவராக இருந்தால், இனி தினமும் 2 மணி நேரம் ஜெபிப்பேன் எனத் தீர்மானித்து விடாதீர்கள்.

அதற்க்கு பதிலாக, 15 நிமிடம் தினமும் ஜெபிபேன் என ஆரம்பியுங்கள்.
அதில் உறுதியாக இருந்து, படிப்படியாக உயருங்கள்.
பெரிய காரியங்களின் துவக்கம் சிறியதே!![சக 4:10}

* ஒரேவேளையில் நிறைய தீர்மானங்களை எடுக்காதீர்கள்.
ஜனவரியில் மொத்தமாய் 12 தீர்மாங்கள் எடுப்பதற்க்கு பதில், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு தீர்மானமாக எடுத்து, அதை செயல் படுத்தலாம்.
கிறிஸ்துவ வாழ்க்கை என்பது
நடத்தல்; அது குதித்தல் அல்ல!!
அது படிக்கட்டு;லிப்ட் அல்ல!!

*உங்கள் நெருங்கிய ஜெபத்தோழனோடு அல்லது வாழ்க்கைதுணையோடு உங்கள் புது வருட தீர்மானங்களை பகிர்ந்துக்கொள்ளலாம். இவ்விதப் பொறுப்பான மேற்பார்வ்வை உங்களுக்கு பயனளிக்கும்.

*ஆனால் தனிப்பட்ட தீர்மாங்களை பிறருக்குச் சொல்ல வேண்டாம்.
தீர்மானங்கள் பொருத்தனைகள் அல்ல.
உங்கள் இருதயத்தின் விருப்பங்களை கடவுளிடம் கூறிவிட்டு, அவற்றின் நிறைவேறுதலுக்காக அவரைநம்பியிருங்கள்.{சங் 37:5]

Wednesday, December 12, 2007

புகை ஒரு பகை




"புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றுகிறேன்" என்போர் சிலர். சுருள் சுருளாய் புகைவிட்ட பலர் வாழ்நாளின் இறுதியில் சுருண்டு படுத்துக்கிடப்பது வாழ்க்கையின் வாடிக்கை...


இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பீடி, சிகரெட் கிடையாது.ஆகவே வேதத்தில் புகைப்பழக்கத்தைப் பற்றி நேரிடியான போதனை இல்லை. எனினும் பொது அறிவின்படி பார்த்தாலும், எல்லா சிகரெட் பெட்டிகளிலும், கீழ்கண்ட வாசகம் உண்டு:


Statutory warning: Smoking is injurious to health.


புகைத்தல் நம் ஆரோக்கியத்திற்க்குக் கேடு என்பது விஞ்ஞான ரீதியில் உலகம் முழுவதும் மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழகத்தில் பொதுவிடங்களில் புகைப்பது சட்டத்தின்படி குற்றம்..
வேதமும்" பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்வது போல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டும்"(3 யோ 2) என விரும்புகிறது. எனவே புகைப்பது கடவுளின் விருப்பத்திற்க்கு மாறானது.ஆகவேதான் புகைப்போர் பலரது மனசாட்சியும் அவர்களுக்கு உறுத்துதலாய் உள்ளது.


புகைப்பிடிப்போர் பெரும்பாலும் ஒருவித அடிமைத்தனத்துக்குள்தான் இருப்பார்கள்(யோ 8:34).ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குரிய உயரிய கோட்பாட்டை திருமறையில் இப்படி வாசிக்கிறோம்:"எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு,ஆனாலும் எல்லாம் தகுதியாய் இருக்காது; எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஆனாலும் நான் எதற்கும் அடிமைப்படமாட்டேன்" (1 கொரி 6:12). தீதாய் தோன்றும் எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள் என்றும் திருமறை போதிக்கிறது. புகை நமக்கு பகை!


பலர் இன்று இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். பிரச்சனைக்குத் தீர்வு இதோ:
"இயேசு உங்களை விடுதலையாக்கினால் உண்மையிலே நீங்கள் விடுதலையாவீர்கள்"(யோ 8:36)


தூயாதி தூயவரே, எங்களுக்கும் எங்களை சிற்றியிருப்போருக்கும்
தீமை விளைவிக்கும் எவ்விதப் பழக்கத்தையும்,
எங்களுக்கு எவ்வளவு பிரியமாயிருந்தாலும், விட்டு விலக சக்தி தாரும்!

Thursday, December 6, 2007

விசுவாசம்




என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனின் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் ( யோ 7:38)


நம்மிலுள்ள விசுவாசத்தை நாம் பகிர்ந்துக்கொள்ளும்படி கடவுள் விரும்புகிறார். அவ்வாறு பகிர்ந்துக்கொள்ளுதல் நமது விசிவாசத்தை பெருகச் செய்யும்."எவன் தன்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதி 11:25)
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நபர்களின் விசுவாச பகிந்துக்கொள்ளுதலை பார்ப்போம்.


பர்னபா:
-------------
"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலிம் நிறந்தவனுமாயிருந்தான்.அநேக மக்கள் ஆண்டவரிடம் சேர்க்கப்பட்டார்கள்" (அப் 11:24).
விசுவாசத்தில் வல்லவனாகிய பர்னபா தன் விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொண்டதின் மூலம் கணக்கற்ற மக்கள் விசுவாசத்தைப் பெற்றவர்களாய் திருச்சபையில் இணைய முடிந்தது.


பவுல்:
----------
விசுவாசத்தை பகிர்ந்துக்கொள்ள பேச்சுத்திறன் அவசியமில்லை. தெளிவாக எளிய நடையில் சொன்னால் போதும். அதிகம் படித்தவராயிருந்தாலும் பவுல் தனது அறிவிலும் திறமையிலும் ஒருநாளும் நம்பிக்கை வைக்கவில்லை. திருவசனத்தின் வல்லமையையே அவன் எப்பொழுதும் நம்பினான்.அதுவே அவரது வெற்றி நிறைந்த திருபணியின் இரகசியமாகும் (1 கொரி 2:1-5).


திமிர்வாதக்கரனின் நண்பர்கள்:
--------------------------------------------------------
"படுக்கையில் கிடந்த முடக்குவாதமுற்றவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள், அவர் அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, முடக்குவாதக்கரனை நோக்கி:"மகனே தைரியமாயிரு:உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன: என்றார்.(மத் 9:2)
நான்கு பேர் தங்கள் விசுவாசத்தைத் திமிர்வாதக்காரன் ஒருவனோடு பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் தங்கள் செயலில் அதைக் காட்டினர். இயேசு அவர்களது விசுவாசத்தைக்கண்டு மனம் மகிழ்ந்தார். அவர்கள் விசுவாசத்தில் இன்னும் வளரும்படி, திமிர்வாதக்கரனைச் சுகமக்கினார்.


அம்மா, பாட்டியின் விசுவாசம்:
-------------------------------------------------------
"அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும்,உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்:(2 தீமோ 1:5).
இவை தீமொத்தேயுவிற்க்கு பவுல் எழுதியது. பெண்களை உற்ச்சாகமூட்டும் வசன்ம் இது! வெளியே போய் பிரசங்கிக்க முடியாவிட்டாலும், வீட்டில்தானே விசுவாசத்தைப் பகிர்ந்துக்கொள்ள வழியிருக்கிறதே! நாம் கடவுள் மீதுல்ள விசுவாசத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளபோது, அது கடவுளைக் கன்படுத்துகிறது: பகிந்துக்கொள்ளும் நபரைக் கடவுள் கன்ப்படுத்துகிறார். எனவேதான் வேதத்தில் தீமோத்தேயுவின் பாட்டி, மற்றும் தாயாரின் பெயரும் வந்துவிட்டது!


இறைக்க இறைக்க ஊறும் ஊற்று;
சொல்லச் சொல்ல வளரும் விசுவாசம்!

அதிகாரத்திற்க்கு கீழ்படிதல்!!!



அதிகாரிகளுக்கு கீழ்படிதல், கடவுளுக்கு கீழ்படிதலாம். நாட்டின்


சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.



இனி வருமானவரி செலுத்த தவறமாட்டோம்:
சுங்கவரி அதிகாரிகளை ஏய்க்கமாட்டோம்:
எவருக்கும் லஞ்சம் கொடுக்கமாட்டோம்:
சாலை விதிகளை மீறமாட்டோம்:
இப்படி நாம் அனைவரும் உறுதிக்கொண்டால் உலகமே மாறிவிடுமே!



நாம்தான் உலகிற்கு உப்பு:
நமது உப்புத்தன்மை குறைந்துப்போனால் உலகம் கெட்டுப் பயனற்றுப்போகுமே.
நாம்தான் உலகிற்கு விளக்கு:
நமது பிரகாசம் மங்கிப்போனால் உலகம் இருண்டு படுகுழியில் இறங்குமே.(மத்:13,14)



நாட்டின் சட்டம் நற்செய்தியறிவிப்பைத் தடுத்தாலோ, இன்னொரு மதத்தை நம்மீது திணித்தாலோ அதற்குக் கீழ்படிய நாம் கடமைப்பட்டவ்ர்களல்ல (தானி 3:16)



நாம் வேலைசெய்யும் இடங்களிலுள்ள மேலதிகாரிகளுக்கும் முழுமனதோடு கீழ்ப்படியவேண்டும். " வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல,உங்கள் தலைவர்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடு கீழ்படிந்து , மனிதருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாய்ப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் பணியாளராய் மனபூர்வமாய் கடவுளுடைய திருவுளத்தின்படிச் செய்யுங்கள்...மனிதருக்காக அல்ல, கடவுளுக்காகவே நல்மனதோடு வேலை செய்யுங்கள்" (எபே 6:5-8) நமது அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது, கிறிஸ்துவைச் சேவிப்பதாம் (கொலோ 3:22-24)



மேலதிகாரிகளில் " நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல: முரட்டுக் குணமுள்ளவர்களுக்கும்" நாம் கீழ்படிய அழைக்கப்பட்டிருக்கிறோம் ( 1 பேது 2:18).



கடவுளுக்குக் கீழ்படிகிறேனென்று சொல்லியும் அதிகாரிகளுக்குக்
கீழ்ப்படியாதவன் வீணன்: கண்ணியம் அவனிடத்தில் இல்லை.

Saturday, December 1, 2007

மன்னிப்போம், மறப்போம்!



உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்..
உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (மத் 5:44)


சில வேளைகளில் நம் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைளால் நம்மை பகைக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவ்வித மக்களோடு சமாதனமாயிருப்பது இயலாமல் போகலாம். எனவே தான் "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனிதரோடும் சமாதானமாயிருங்கள்" என்கிறது வேதம். (ரோ 12:18).


நம்மீது கர்த்தர் எவ்வளவு பொறுமையாயிருந்தார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். எத்தனை முறை நாம் அவரை ஏமாற்றியும் அவர் நம்மை விட்டுவிடவில்லையே. இரக்கத்தில் செல்வந்தராகிய அவர் நாமும் பிறரை குறைந்தது ஏழெழுபது தடவையாவது மன்னிக்க எதிர்பார்க்கிறார்.


இளைஞனாகிய யோசேப்பு தனக்குத் துரோகம்செய்து தன்னைக் குழியில் எறிந்துவிட்ட தனது சகோதரரைக்கூட மன்னித்தது அன்றோ இறைவன் விரும்பும் குணம்?


நமது விரோதிக்களுக்காக ஜெபிக்கவேண்டும் (மத் 5:44). ஜெபமண்ணில் அன்பு தழைத்தோங்கும். நம்மை வெறுக்கும் நபருக்காக ஜெபிக்கத் துவங்குகையில் அவரை நேசிப்பது எளிதாகுகிறது. சாதாரணமாக நம்மால் முடியாத நிலையிலும் எதிர்போரை நேசிக்க அவர் தமது தூயாவியானவர் மூலம் தமது அன்பை நம்மில் ஊற்றுவார்.


பிசாசைக்கூட சபிக்க கடவுள் நம்மை அனுமதிக்கவில்லை(யூதா 9). எவரையும் சொல்லால் பழித்துவிடாதிருங்கள். கசப்பான வேர் இதயத்தில் வேண்டாம் ( எபி 12: 14,15). பழிவாங்குதல் கடவுளுக்கே உரியது. அந்த ஆயுதத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்.நம்மை துன்புருத்துவோருக்கு நன்மையொன்று செய்யத் தருணம் நோக்கியிருப்போம்.



நன்மைக்கு தீமை செய்வது சாத்தானின் பண்பு,
தீமைக்கு தீமை செய்வது மனிதனின் இயல்பு,
தீமைக்கு நன்மை செய்வதோ இறைவனின் மாண்பு!

Tuesday, November 27, 2007

கடவுளுக்குக் கடன்!


"வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு;
அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு" (நீதி 11:24)

யாருக்கு கொடுக்கவேண்டும்?
தேவையிலுள்ள எவருக்கும் உதவ வேண்டும். தீயோர் மீதும் நல்லோர் மீதும் தமது சூரியனை உதிக்கப்பண்ணும், நீதியுள்ளோர்மீதும் அநீதியுள்ளொர் மீதும் மழையை பொழிபவர் நமது இயேசு அப்பா! [ மத் 5:45]

எவ்வளவு கொடுக்க வேண்டும்?
வேதத்தில் இதற்குச் சட்டமில்லை. ஆனால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கடவுள் பிரியமாயிருக்கிறார்: என்றிருக்கிறது
[ 2 கொரி 9:7 ].
இவ்வசனம் எளியவருக்கு உதவுதலியே அடுத்தது.

பிச்சைக்காரர், ஊனமுற்றோர் போன்றொரை அழைத்து அவர்களுக்கு உணவுடை கொடுத்து " எளியோர் பண்டிகை" ஒன்று நாம் கொண்டாடினால் என்ன? எவ்வளவு குதுகலமாயிருக்கும்! வருகிற கிறிஸ்துமஸை அப்படிக் கொண்டாடுங்களேன்!

எளியவருக்கு அள்ளிக் கொடுப்போர் மீது வரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். அவர்களுக்கு ' பொருளாதார' ஆசீர்வாதம் உண்டு. " ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்: அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" [ நீதி 19:17]

அப்படியே "உடலுக்கடுத்த" ஆசீர்வாதமும் உண்டு. பசியுள்ளோரோடு உங்கள் அப்பத்தைப் பகிர்ந்து ஆடையில்லாதோரை உடுத்துவிக்கும்போது உங்கள் ' சுகவாழ்வு துளிர்க்கும்" [ ஏசா 58:8]

" ஆன்மீக" ஆசீர்வாதமும் உண்டு, " ஏழைக்களுக்கு கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்" [ 2 கொரி 9:9,10]. எளியவரோடு ஈடுபாடு கொள்ளும்போது நமது ஆவியும் எளிமையாகிறது.

இறுதியாக, "நித்திய" ஆசீர்வாதம். நற்செயல்களில் செல்வந்தராகவும், தாராளாமாய்க் கொடுக்கிறவர்களாகவும் இருக்கையில் "நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி.....நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறோம்"
[ 1 தீமோ 6:18, 19]

Tuesday, November 13, 2007

மேன்மைக்கு முன்னானது தாழ்மை!



உலகில் பலருக்கும் தாங்கள் மற்றவர்களைவிடல் பெரியவர்களாக - முக்கியமாணவர்களாக-தலைவர்களாக-உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவா உண்டு. இயேசுவின் சீடர்களும் இதற்கு விதிவிலகல்ல. ஒருமுறை அவர்களில் எவன் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.[லூக்கா 22:24]


இயேசு அவர்களிடம் ," உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கட்டும்" என்றார் [லூக்கா 22:26]சிலுவையின் மரணம் வரை தம்மைத்தாமே தாழ்த்தினவரல்லவா நம் இயேசு?[பிலி 2:8] நாமும் கனம்பண்ணுகிறதிலே ஒருவருகொருவர் முந்திக்கொண்டு, மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் பெரியவர்களாக எண்ணுவோம் [ரோ 12:10;பிலி 2:3] எந்த வேலையும் நமது தகுதிக்கு குறைந்தது என்று எண்ணக்கூடாது. நமதாண்டவர் தம் சீடர்களின் கால்களையே கழுவித் துடைத்தாரல்லவா?[யோ 13:5]


இன்னும் அநேகருக்கு தங்களுடைய கல்வி, செல்வாக்கு, தோற்றம், சபைப்பிரிவு மற்றும் சாதி முதிலியவற்றைப்பற்றியெல்லாம் பெருமை." மனிதருக்குள்ளெ மேன்மையாக எண்ணப்படுவது கடவுளுக்கு முன்பாக அருவருப்பு [லூக்கா 16:15 இ]. நாம் இறக்கும்போது இவை எதுவும் நம்மோடுகூட வருவதில்லை. இவ்வுலக மேன்மையெல்லாம் குப்பை.இதையறிந்த பவுல் ," கிறிஸ்த்துவுக்காய் நான் எல்லாவற்றையும் இழப்பென்று விட்டேன்; குப்பையென்றே எண்ணுகிறேன்" என்றார் [ பிலி 3.11]


தூய்மையாய் வாழ்வதும் தங்கள் சாமர்த்தியமென எண்ணிக்கொண்டிருப்போரும் உண்டு. தன் பக்தியைக் குறித்து தம்பட்டம் அடித்துகொண்ட பரிசேயனின் ஜெபத்தை கர்த்தர் புறகணித்தார்.


நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கட்டும் [1 கொரி 10:12]
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது [ மத் 5:3]
மேனமைக்கு முன்னானது தாழ்மை[ நீதி 15:33 ஆ]


{ ஆர்.ஸ்டான்லி அவர்களின் 'நாளொரு மேனி என்ற தின தியான பகுதியிலிருந்து எழுதியது}

Sunday, November 4, 2007

Tamil Christian Song - Poorana Azhagullavar

என்னை கவர்ந்த பாடல் வரிகள், காட்சி அமைப்பு, பார்த்து ரசியுங்கள்!!